Tuesday, February 13, 2007

காதல் என்னும் மந்திரச்சொல்

அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த்தற்று - வள்ளுவன்

வள்ளுவன் எழுதிய வாழ்வியல் நூலில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாக ஆக்ரமித்துள்ள மந்திரச்சொல் - காதல் என்னும் அன்பு. அய்யனை விடவா ஒருவர் வாழ்க்கையை வகை பிரிக்க முடியும்.மனித வாழ்வின் அடித்தளமான அந்த அன்பை... காதலை பற்றி ஒரு சிறு பதிவு செய்தால் என்ன என்று தோன்றியதன் விளைவே காதலர் தினத்திற்கு முந்தைய நாளின் இந்த பதிவு!

மனிதன் உயிர் மூச்சு பெறும் அந்த கணத்திலேயே அவன்/அவளால் உணரப்படும் முதல் உணர்வே தாயின் அன்புதான்.அப்போதிலிருந்து அவன் கடைசி மூச்சு விடும் மரணம் வரை அவனைத்தொடர்கிறது காதல்.
சாதாரணமாக அவனது புத்திக்கு எட்டாமல் இருக்கும் இந்த நிலைமை வாழ்வின் சில தருணங்களில் அவனை முழுவதும் ஆக்ரமித்து அந்த சிறிய மூளைக்குள் இறங்கி அவனை தெய்வ நிலைக்கு இட்டுச்செல்லும்.

சரி ,எப்பொழுதெல்லாம் அந்த தருணங்கள் வரக்கூடும்? முதல் தருணம் சற்றே நீண்ட காலத்தைக்கொண்ட குழந்தைப்பருவம்.தாயின் அரவணைப்பிலும் அவளது முழு நிழலான கவனத்திலும் வளரும் அந்த விவரம் தெரியும் பருவத்துக்கு முந்தைய நிலை தான் முதல் தெய்வநிலை.உச்சி முதல் உள்ளங்கால்கள் வரைக்கும் அந்த தெய்வ நிலையில் சிலிர்த்த நிலையில் இருக்கும்.99.99 சதவீத மனிதர்களுக்கு அவர்களுடைய வாழ்வில் இந்த நிலையை நிச்சயமாக்கிக் கொடுத்த தாய் என்னும் தெய்வத்துக்கு நன்றி. மனிதனின் ஐம்புலன்களை ஒவ்வொன்றாக இயங்க வைக்கும் அந்த காதல்
தான் வாழ்க்கைக்கு அடித்தளம். இந்த அன்பை சற்று ஆழ்ந்து ஆராய்ந்தோமானால் இவ்வுலகின் எல்லாவற்றுக்கும் மேலாக அதிக சக்தி வாய்ந்த இந்த அன்பே சிவம் என்ற உண்மை புலப்படும்.

காதல் புத்திக்கு புரியும் அடுத்த தருணம் முதன் முதலாக நம்மோடு சம்பந்தமில்லாத ஒருவரிடம் இருந்து கிடைக்கும் வாழ்வின் முதல் நட்பு.
ஒரே பாலைச்சேர்ந்தவராயினும் எதிர்பாலைச்சேர்ந்தவராயினும் நமக்கு முதலில் கிடைக்கும் அந்த நட்பு மகத்தானது. தனியனாய் இந்த உலகத்தின் வெட்டவெளியில் கால் பதிக்கும் அந்த நிலையில் தோளோடு தோள் சேர்ந்து அச்சம் நீக்கி இந்த உலகை வெல்லப்புறப்பட வைக்கும் அந்த உந்து சக்தியின் உணர்வு மகத்தானது.நாம் இருவர் மட்டுமே என்ற அந்த இறுமாப்புடன் அலையும் அந்த உலக வாழ்க்கை கண்டிப்பாக அனைவருக்கும் விதிக்கப்பட்டது.சிலருக்கு மிகச்சிறிய வயதில் கிடைக்கலாம் சிலருக்கு சற்று தாமதமாகக்கிடைக்கலாம்,ஆனால் நிச்சயம் அதைக்கடந்து தான் செல்ல வேண்டும். சற்று ஆழ்ந்து சிந்தித்தோமானால் இந்த தெய்வ நிலை தான் நம்மை உலகுக்கு அறிமுகப்படுத்துகிறது.நம்முடைய வெளி உலக உருவத்தை உருவாக்கி வாழ்க்கைப் போற்களத்தில் போராட தயார் செய்கிறது.முதல் தெய்வ நிலை தந்த உயிருக்கு, அந்த ஆன்மாவுக்கு இந்த இரண்டாம் தெய்வநிலை புறத்தோற்றம் கொடுக்கிறது. உச்சி முதலான பாகங்கள் அனைத்தும் சிலிர்த்த நிலையில் இருந்து அமைதி அடைந்து எச்சரிக்கை நிலைக்கு செல்கிறது.

அடுத்த தருணம் நமக்கு எதிர்பாலைச்சேர்ந்தவரோடு நிகழும் அந்தக் அகக்காதல் உணர்வு. நம் புத்திக்குள் வெகு எளிதாக நுழையும் அந்த தருணம் நம்முடைய முதல் தெய்வநிலைக்குச் சமமான ஒன்று.எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து முற்றிலும் வெவ்வேறான வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் அந்த தருணம் வந்தவுடன் தவறாது நம் முன் தோன்றும் அந்த காதலியை , அழைத்து வரும் அந்த காதலை எளிதில் ஆராய முடியாது ஆனால் எளிதில் அனுபவிக்கமுடியும்..முற்றிலும் உணர முடியும். முந்தைய நிலைகளைப்போன்று புற உடல்/உயிர் முழுவதும் உணரப்பட்டாலும் இதயமும் கண்களும் இந்நிலையில் முதன்மை பெறுகின்றன.முழுவதும் ஆக்ரமிக்கின்றன.நம்மை இறைவனின் பாதங்களுக்கு அழைத்துச்செல்கின்றன்.
ஒரு கவிஞன் சொன்னது போல் உலகம் புதிதாகத்தோன்றும் , எண்ணங்கள் விசாலமடையும், பிரபஞ்சம் நம் காலடியில் கிடக்கும்.ஒளியை விடவும் வேகமாக காலம் ஓடினாலும்,அதனைவிடவும் வேகமாக மனது மேலும் இளமையாகும்.புதிய கவிஞன் பிறப்பான், உலகை வென்ற மாவீரன் நம்முள் ஒளிர்வான்.சற்று ஆழ்ந்து சிந்தித்தோமானால் இந்த தெய்வநிலைதான் நம்முடைய வாழ்வின் வெற்றி, உலகம் என்னும் போற்க்களத்தில் நாம் பெற்ற மாபெரும் வெற்றி. நம் வாழ்வின் அர்த்தம் புரிய வைத்த இறுதி வெற்றி.நம் வாழ்க்கைப்பயணத்தின் கடைசி எல்லைக்கோடு வரை நம்மோடு உறவாடப்போகும் ..தொடரப்போகும் வெற்றி. இந்த தெய்வ நிலையை அடைய வைத்த தாயின் மற்றொரு பதிப்பாம் காதலிக்கு நன்றி!

அடுத்ததும் இறுதியானதுமான தருணம் இவ்வுலகுக்கு நாம் விட்டுச்செல்லும் நம்முடைய அடையாளம்.அது ஒரு உயிராகவும் இருக்கலாம். நம் உயறிய எண்ணங்கள் ,செய்கைகள்,கனவுகளின் பிரதிபலிப்புகளாகவும் இருக்கலாம்
இதன் மூலம் இந்த மனித சமுதாயம் அடையும் நன்மைகள் மேன்மைகள் ,அதன் மூலம் வெளிப்படும் அந்த காதல் தான் நம்மை இறைவனின் காலடியில் இருந்து அவன் உயிருக்குள் இறங்க வைக்கும் இவ்வுலக வாழ்வின் பெரியதும் அரியதுமான இரகசியம்.

காதல் என்னும் இந்த மந்திரச்சொல் தான் மனித வாழ்வின் முதலும் முடிவும்!

மீண்டும் சந்திக்கும் வரை ...விடை பெறும் உங்கள் நண்பன் :)